திருவாரூரில் நீர்வரத்து மேலாண்மை பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
மத்திய நிலத்தடி நீர் வாரியம் சார்பில் நடைபெற்ற நீர்வரத்து பயனளவு கணக்கீட்டுத் திட்டம் மற்றும் மேலாண்மை குறித்து இரு நாள் பயிற்சி முகாமை மாவட்ட ஆட்சியர் இல.நிர்மல்ராஜ் தொடங்கி வைத்துப் பேசியது:
நிலத்தடி நீரை மேம்படுத்த மழை நீரை சேமிக்க வேண்டும். அதற்கு அனைத்து இடங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அதிகப்படுத்த வேண்டும். பெருகி வரும் மக்கள்தொகை , அதிக நீர் எடுப்பு, கடல் நீர் உள்புகல், நீரின் வேதியியல் தன்மை பாதிப்பு போன்ற காரணிகளால் விவசாயிகள், நீர் மேலாண்மை செய்பவர்கள் புதிய விஞ்ஞான தொழில் நுட்ப ரீதியில் தகுந்த திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.
இந்த இரு நாள் பயிற்சி முகாமில் மாவட்ட புவியடுக்கு அமைப்பு, நீர்தாங்கி பாறைகள், சோதனை கிணறுகளின் விவரங்கள், நீர்ம ட்ட விவரங்கள், நீரின் தன்மை குறித்த வகுப்புகளும், மாவட்டத்தில் நிலவும் நீர் பிரச்னையும், அதற்கான தீர்வுகள் காண்பது குறித்தும் விளக்கப்படும். மேலும் மழை நீர் சேமிப்பு கட்டுமானங்கள், தொழில்நுட்ப தகவல்கள் குறித்தும் விளக்கப்படும். முகாமில் பங்கேற்ற விவசாயிகள் மற்ற விவசாயிகளுக்கு தொழில்நுட்பங்களை எடுத்துக் கூற வேண்டும் என்றார் நிர்மல்ராஜ்.
மத்திய நிலத்தடி நீர்வாரிய மண்டல இயக்குநர் (பொ) ஏ. சுப்புராஜ், வேளாண்மை இணை இயக்குநர் மயில்வாகனன், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அழ. மீனாட்சிசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.