மாணவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை தாங்கள் படித்த பள்ளியிலேயே செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நிகழாண்டு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் தங்களது கல்வித் தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்துக்குச் சென்று பதிவு செய்வதற்கு பதிலாக, தாங்கள் படித்த பள்ளியிலேயே மதிப்பெண் பட்டியல் பெறும் நாளிலேயே, கணினி மூலம் ஆன்லைனில் பதிவு செய்து கொள்ள சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நிகழாண்டு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் தங்களது பள்ளியில் மதிப்பெண் சான்றிதழை பெறச்செல்லும் போது, குடும்ப அட்டை, ஆதார் அட்டை நகலுடன் சென்று வேலைவாய்ப்பு அலுவலக பதிவை அந்த பள்ளியிலேயே இணையதளம் மூலம் பதிவு செய்து அதற்கான அடையாள அட்டையை பள்ளியிலேயே பெற்றுக்கொள்ளலாம். சான்றிதழ் வழங்கும் ஜூலை 26 முதல் ஆக.9-ஆம் தேதி வரை பள்ளியில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த தேதிகளில் பதிவு செய்யும் அனைவருக்கும் ஜூலை 26-ஆம் தேதி பதிவு மூப்பு வழங்கப்படும்.