திருவாரூரில் திமுக இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவாரூர் தொகுதிக்குள்பட்ட திமுக இளைஞரணி நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் சட்டப்பேரவைத் தொகுதி இளைஞரணி பொறுப்பாளர் ஆர். ரஜினிசின்னா தீர்மானங்களை வாசித்தார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தமிழகத்தில் 13 முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து வைர விழாக் கண்ட திமுக தலைவர் மு. கருணாநிதிக்கு பாராட்டு தெரிவிப்பது.
திருவாரூர் மாவட்டத்தில் 2015-16 -ஆம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்கியதில் திமுக பேரவை உறுப்பினர்கள் உள்ள திருவாரூர், மன்னார்குடி தொகுதியில் பாரபட்சம் காட்டிய அதிமுக அரசைக் கண்டிப்பது, தமிழகத்தின் வறட்சி நிலை அறிந்து சிறு, குறு என்ற பேதம் பார்க்காமல் அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நகரச் செயலர் எஸ். பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இளையராஜா, ஒன்றியச் செயலாளர்கள் தேவா, பாலச்சந்தர், கலியபெருமாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.