நீடாமங்கலம் அருகே வீடு கட்ட ஞாயிற்றுக்கிழமை பள்ளம் தோண்டியபோது 3 சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வட்டம் கொரடாச்சேரி அருகேயுள்ள வெண்ணவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜீவ்காந்தி. இவர் புது வீடு கட்டுவதற்கான பணிகளை ஞாயிற்றுக்கிழமை தொடங்கினார். இதற்காக கட்டுமானத் தொழிலாளர்கள் பள்ளம் தோண்டியபோது, உலோகத்தினாலான அரை அடி உயரத்தில் காளிங்கநர்த்தன கிருஷ்ணர், பெருமாள், அம்பாள் ஆகிய 3 சுவாமி சிலைகள் மற்றும் பூஜை செய்யப் பயன்படும் பொருள்கள் பூமியில் புதைந்திருந்தது தெரியவந்தது.
தகவலறிந்த நீடாமங்கலம் வட்டாட்சியர் குணசீலி மற்றும் வருவாய்த் துறையினர் நிகழ்விடத்துக்குச் சென்று, சுவாமி சிலைகளை பார்வையிட்டனர். பின்னர் அந்த சிலைகள் நீடாமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
இந்த சிலைகள் பஞ்சலோகத்தால் ஆனதா அல்லது பித்தளை சிலைகளா என்பது குறித்து சிலை மதிப்பீட்டாளர் ஆய்வுக்குப்பின் தெரியவரும் என வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.