தேசிய, பன்னாட்டு அளவில் சாதனை புரிந்தவர்கள் 2018-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பத்ம விருது பெற பல்வேறு துறைகளில் தேசிய, பன்னாட்டு அளவில் தலைசிறந்தவர்களாகவும், தனிநபர் சாதனை புரிந்தவர்களாகவும் இருக்க வேண்டும். கலை, இலக்கியம், இசை, ஓவியம், சிற்பம், சினிமா ஆகிய துறையினர் தேசிய அளவில் தன் திறமைகளை நிரூபித்தவர்களாக இருக்க வேண்டும்.
பொது நல, தன்னார்வத் தொண்டு, சாதி, சமய தொண்டாற்றியவர்கள், சட்டம், பொது வாழ்க்கை, அரசியல் ஆகியவற்றில் சேவை புரிந்தவர்கள், அறிவியல், பொறியியல், விண் வெளி ஆராய்ச்சி ஆகியவற்றில் சாதனை படைத்தவர்கள், நாட்டு வணிகம் மற்றும் தொழிற்சாலை, வங்கி, பொருளாதாரம், சுற்றுலா ஆகிய துறைகளில் சாதனை புரிந்தவர்கள், மருத்துவ ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனைகளை நிகழ்த்தியவர்களுக்கு பத்மஸ்ரீ, பத்மவிபூஷன், பத்மபூஷன் ஆகிய விருதுகள் இந்திய அரசால் வழங்கப்படவுள்ளன.
எனவே, மாவட்டத்தில் உள்ள தேசிய, பன்னாட்டு அளவில் சாதனை புரிந்தவர்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் மற்றும் மேலும் விவரங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளமான www.padmaaawards.gov.in
மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 22-ஆம் தேதிக்குள் மாவட்ட அலுவலகத்தில் நேரில் கொடுக்க வேண்டும்.