அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய துணைத் தலைவர் ராகுல்காந்தியின் பிறந்த நாளையொட்டி, மன்னார்குடி நகர காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் திங்கள்கிழமை கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு நகரத் தலைவர் ஆர். கனகவேல் தலைமை வகித்தார்.
பேருந்து நிலையம் அருகேயுள்ள சிங்கமகா காளியம்மன் கோயிலில் ராகுல்காந்தி பெயரில் அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினர். பின்னர், பொதுமக்களுக்கும், வர்த்தர்களுக்கும் இனிப்பு வழங்கினர். அதைத்தொடர்ந்து காமராஜர், இந்திராகாந்தி சிலைகளுக்கு மாலை அணிவித்து, கட்சிக் கொடியை ஏற்றிவைத்தனர்.
விழாவில் மாவட்டச் செயலர் சங்குகோபால், மாவட்ட துணைத் தலைவர்கள் நெடுவை குணசேகரன், பாலசுப்ரமணியன், நகர பொதுச் செயலர் ஆனந்த், நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் வடுகநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.