திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக கட்சிக் கொடிக் கம்பங்களை சேதப்படுத்தியவர்களை கைது செய்யக் கோரி சனிக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
கொரடாச்சேரி கடைவீதியில் வைக்கப்பட்டிருந்த விடுதலைச் சிறுத்தைகள், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகளின் கொடிக் கம்பங்களை வெள்ளிக்கிழமை இரவு மர்ம நபர்கள் யாரோ சேதப்படுத்தியுள்ளனர். இதையறிந்த, அக்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் சனிக்கிழமை திருவாரூர் - தஞ்சை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, கொடிக் கம்பங்களை சேதப்படுத்தியவர்களை கைது செய்யக் கோரி முழக்கங்களை எழுப்பினர். தகவலறிந்து வந்த காவல்துறையினர், சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது. இந்த மறியலால் தஞ்சை - திருவாரூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.