திருத்துறைப்பூண்டியில் அரசு டாஸ்மாக் மதுபானக் கடையை மூடக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டது தொடர்பாக, திமுகவினர் 50 பேர் மீது போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்துள்ளனர்.
திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகில் கடந்த 10 நாள்களுக்கு முன்னர் புதிதாக அரசு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதால் டாஸ்மாக் கடையை மூடக்கோரியும், காமராஜர் சிலை, பழைய பேருந்து நிலையம், ராம மடத்தெரு, புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரியும் கடந்த வியாழக்கிழமை புதிய பேருந்து நிலையம் அருகில், திமுக சார்பில் அக்கட்சியின் நகரச் செயலர் ஆர்.எஸ். பாண்டியன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறி, நகரச் செயலர் ஆர்.எஸ். பாண்டியன் உள்பட திமுகவினர் 50 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.