திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் அனைத்து மருந்தாளுநர் சங்கத்தின் சார்பில் கோரிக்கை விளக்க பிரசார இயக்கம் புதன்கிழமை நடைபெற்றது.
மருந்தாளுநர்களுக்கு 5 கட்டமாக பதவி உயர்வு வழங்க வேண்டும், துணை இயக்குநர் அலுவலகத்தில் உள்ள மருந்து கிடங்கிற்கு தலைமை மருந்தாளுநர் பணியிடம் உருவாக்க வேண்டும், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தலைமை மருந்தாளுநர் பதவி உருவாக்க வலியுறுத்தியும் வியாழக்கிழமை (மார்ச் 23) தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தை விளக்கி கோரிக்கை பிரசார இயக்கம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் எடையூர், ஆலத்தம்பாடி, முத்துப்பேட்டை உள்பட மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்றது.
இந்தப் பிரசார இயக்கத்தில் அச் சங்கத்தின் மாவட்டத் தலைவர் தாணை டி.மணிவண்ணன், மாவட்ட செயலர் தியாகராஜன், மாநிலத் தலைவர் வி.கோவிந்தராஜ், மாநிலப் பொருளாளர் வி.சண்முகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.