திருவாரூர் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் 2017-18 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளதால் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசின் கலைப்பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கிவரும் திருவாரூர் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் குரலிசை, நாகசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின் மற்றும் மிருதங்கம் ஆகிய கலைகளில் 3 ஆண்டு முழுநேர பயிற்சி அளிக்கப்பட்டு, தமிழக அரசின் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு அரசு விதிப்படி இலவச விடுதி வசதி, கல்வி உதவித் தொகை, இலவச பேருந்து கட்டண சலுகைகள் மற்றும் மாதம்தோறும் கல்வி ஊக்கத்தொகை ரூ. 400 வழங்கப்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சேர 12 முதல் 25 வயதுகுள்பட்டவராக இருக்கவேண்டும்.
குரலிசை, பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய கலைகளுக்கு 7-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். நாகசுரம், தவில், தேவாரம் ஆகிய கலைகளுக்கு தமிழ் எழுதப் படிக்க தெரிந்தால் போதும். கல்விக் கட்டணம் ஆண்டுக்கு ரூ.152 செலுத்தவேண்டும். சேர்க்கை ஜூன் 1-ஆம் தேதி முதல் நடைபெறுகிறது. ஆண் மற்றும் பெண் இருபாலரும் சேரலாம். மேலும், விவரங்களுக்கு இசைப் பள்ளி தலைமையாசிரியரை அணுகலாம்.