திருத்துறைப்பூண்டியில் மின்சாரம் பாய்ந்து புதன்கிழமை உயிரிழந்த வெல்டிங் நிறுவன ஊழியர் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கக் கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருத்துறைப்பூண்டி வட்டம், அம்மனூர் கிராமம் விளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் காளிதாஸ் மகன் ராஜு (19).
இவர் தனியார் வெல்டிங் நிறுவனத்தில் வேலை செய்துவந்தார். இவர், திருத்துறைப்பூண்டி கிழக்கு கடற்கரை புறவழிச் சாலையில் உள்ள ஒரு கடையில் கூரை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.
திருத்துறைப்பூண்டி போலீஸார், ராஜு சடலத்தைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், ராஜு குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கினால்தான் சடலத்தைப் பெறுவோம் எனக் கூறி உறவினர்கள் நாகை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் நிகழ்விடத்துக்கு சென்று, நிவாரணம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதி அளித்ததன் பேரில், சாலை மறியல் விலக்கிக்
கொள்ளப்பட்டது.