தமிழக மின்வாரியத்தில் பணியாற்றும் சுமார் 10,000 ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும் என தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலத் தலைவர் எஸ்.எஸ். சுப்ரமணியன் வலியுறுத்தியுள்ளார்.
சம வேலைக்கு சம ஊதியம், ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவாரூரில் புதன்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மேலும் அவர் பேசியது:
அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மின்வாரியத்தில் உடனடியாக அமல்படுத்த வேண்டும். தமிழகம் முழுவதும் 10,000-க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்து, கூலி நிர்ணய ஒப்பந்தப்படி ரூ. 750 தினக் கூலியாக வழங்கவேண்டும்.
யாரும் கண்டுகொள்ளாத நிலையில் தொடர் போராட்டங்கள், சட்டப் போராட்டங்கள் மூலமாக இரு கட்டமாக 39,000 ஒப்பந்தத் தொழிலாளர்களை சமீப காலத்தில் நிரந்தரப்படுத்தி இருக்கிறோம். தற்போது, மேலும் 10,000 பேரை நிரந்தரப்படுத்த போராடி வருகிறோம். 2015 ஆம் ஆண்டிலிருந்து ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நடைபெறாமல் உள்ளது. அதை நடத்துவதற்கு சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. பணியின்போது உயிரிழப்பு என்பது ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கே ஏற்படுகிறது என்பதை இந்த அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். அனைத்திற்கும் ஒப்பந்தத் தொழிலாளியைப் பயன்படுத்தி விட்டு அவர்களை அங்கீகரிக்கமாட்டோம் என்பது ஏமாற்று வேலை. மின்வாரிய ஊழியர்களின் பணப்பலன்களை வாரியம் உடனடியாக வழங்குவதுடன்,ஊதிய உயர்வை அறிவிக்கவேண்டும் என்றார். திட்டக் கிளைத் தலைவர் சுப்ரமணியன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாநில பொதுச் செயலர் ராஜேந்திரன், மாநில துணைத் தலைவர் ரெங்கராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.