நீடாமங்கலம் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் அம்மா மோட்டார் வாகனப் பழுது பார்த்தல் மற்றும் பராமரிப்பு பயிற்சி தொடங்கப்படவுள்ளதால் இப்பயிற்சியில் சேர தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அப்பயிற்சி நிலைய அலுவலர் எம். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நீடாமங்கலம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில், ஆட்டோமெட்டிக் சர்வீஸ் டெக்னீசியன் (இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள்) பயிற்சி 4 மாதங்களில் தினமும் 4 மணி நேரம் வீதம் பிற்பகல் 3 மணி முதல் 7 மணி வரை மொத்தம் 300 மணி நேரம் அளிக்கப்படும்.
வேலை வாய்ப்பற்ற பள்ளி படிப்பை இடையில் நிறுத்திய, 5-ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்ற, குறைந்த பட்சம் 18 வயது பூர்த்தியடைந்த ஆண், பெண் இருபாலரும் உச்ச வயது வரம்பின்றி இப்பயிற்சியில் சேரலாம்.
இப்பயிற்சியில் சேர அதிகபட்சமாக ஒரு குழுவுக்கு 20 பேர் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு நீடாமங்கலம் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.