ஒரு பதவி ஒரே ஒய்வூதியம் திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்கி, உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என முன்னாள் ராணுவத்தினர் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
மன்னார்குடியில், முன்னாள் ராணுவத்தினர் நலச் சங்க செயற்குழுக் கூட்டம் மற்றும் சங்கத்தின் 10-ஆம் ஆண்டு தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சங்க கிளைத் தலைவர் ஆர். விஜயராகவன் தலைமை வகித்தார். துணைச் செயலர் தியாகராஜன் முன்னிலை வகித்தார். செயலர் ஜி.புருஷோத்தமன் ஆண்டறிக்கை வாசித்தார்.
கூட்டத்தில், மறைந்த முன்னாள் படை வீரர்களுக்கு இரண்டு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்துக்கான அறிவிப்பை அரசிதழில் வெளியிட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது. 7-ஆவது ஊதியக் குழுவில் உள்ள குறைபாடுகளை சரி செய்து, அறிவிப்பு வெளியிட அரசை வலியுறுத்துவது உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
மேலும், தமிழ்நாடு அரசின் சட்டத் திட்டத்தின் படி 3 மாதத்துக்கு ஒரு முறை முன்னாள் ராணுவத்தினருக்கான குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தும், இது வரை குறைதீர் கூட்டம் நடத்தாத மாவட்டங்கள் உடனடியாக குறை தீர் கூட்டம் நடத்த வேண்டும் எனவும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளர்களாக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஆர்.என். ராதாகிருஷ்ணன், சங்கத்தின் மாநிலத் தலைவர் கர்னல் சி.பி.அரசு ஆகியோர் கலந்துகொண்டனர்.