உழவு, களைக்கொல்லி மானியத்துக்கு விண்ணப்பம் விநியோகம்
கூத்தாநல்லூர் வேளாண்மை விரிவாக்க மையத்தில், சம்பா தொகுப்புத் திட்டத்தின் கீழ், நேரடி நெல் விதைப்பு செய்த விவசாயிகளுக்கு உழவு மற்றும் களைக்கொல்லி மானியத்துக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.
இதுகுறித்து, கூத்தாநல்லூர் வட்டம் வேளாண்மைத் துறை உதவி அலுவலர் எம். திருச்செல்வம் கூறியதாவது:
2017-ஆம் ஆண்டில், நேரடி நெல் விதைப்பு செய்த விவசாயிகளுக்கு உழவு, களைக்கொல்லி மானியத்துக்கு, கூத்தாநல்லூர் சரகத்தில், வக்ராநல்லூர், சித்தனக்குடி, வெங்காரம், பேரையுர், புனவாசல், பூந்தாழங்குடி, கீழமணலி, லெட்சுமாங்குடி, கூத்தாநல்லூர், சித்தாம்பூர் உள்ளிட்ட 17 கிராமங்களும், வடபாதிமங்கலத்தில் வட கோவனூர், தென் கோவனூர், திருராமேஸ்வரம், ஓவர்ச்சேரி, மஞ்சனவாடி, கொத்தங்குடி, பாலக்குறிச்சி, சாத்தனூர், வேற்குடி, மாரங்குடி உள்ளிட்ட 23 கிராமங்கள் என 30 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு, உழவு மற்றும் களைக்கொல்லி மானியம் வழங்கப்படுகிறது. இதற்காக இதுவரை உழவுக்கு 2,850 ஏக்கருக்கும், களைக்கொல்லிக்கு 2,850 ஏக்கருக்கும் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. உழவு மானியமாக ஏக்கருக்கு ரூ.500, களைக்கொல்லி மானியமாக ஏக்கருக்கு ரூ. 280 வழங்கப்படும் என்றார்.