கிராம உதவியாளர்களுக்கு, அலுவலக உதவியாளர்களுக்கு இணையான காலமுறை ஊதியம் வழங்காதது குறித்து, தஞ்சாவூரில் நவ. 18-ஆம் தேதி நடைபெறும் தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளர் சங்க மாநில செயற்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் நீடாமங்கலம் எஸ். தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் நீடாமங்கலத்தில் திங்கள்கிழமை நிருபர்களிடம் கூறியதாவது:
அலுவலக உதவியாளர்களுக்கு இணையான காலமுறை ஊதியம் 7-ஆவது ஊதியக் குழுவில் கிராம உதவியாளர்களுக்கு வழங்கப்படாத நிலைப்பாடு உள்ளது. பொங்கல் போனஸ் ஆயிரம் ரூபாய் என்பதை தவிர்த்து சதவீத அடிப்படையில் வழங்க வேண்டும்.
கிராம உதவியாளர்களுக்கு திருத்தப்பட்ட ஓய்வூதியம் தொடர்பாக அரசாணை இன்று வரை வெளியிடப்படவில்லை. எனவே, உடனடியாக வெளியிட வேண்டும்.
கிராம நிர்வாக அலுவலராகப் பதவி உயர்வு பெற 10 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும் என்பதை 5 ஆண்டாக குறைக்க வேண்டும். 2017-ஆம் ஆண்டிற்கான கிராம உதவியாளர் நிலையிலிருந்து கிராம நிர்வாக அலுவலர் பதவி உயர்வு முன்மொழிவு ஒதுக்கீடு அரசாணை உடன் வெளியிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து வரும் 18-ஆம் தேதி தஞ்சாவூர் எல்.ஐ.சி. சங்கக் கட்டடத்தில் நடைபெறும் மாநில செயற்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்றார்.