மன்னார்குடி அருகே பெண்ணிடம் நகை திருடிய வழக்கில் ஏற்கெனவே இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒருவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
பெருகவாழ்ந்தானை அடுத்த சித்தமல்லி, ஏ.கே.எஸ். காலனியைச் சேர்ந்தவர் மு. வடுவம்பாள் (40). இவர், கடந்த திங்கள்கிழமை (நவ. 13) சித்தமல்லி பேருந்து நிறுத்தம் அருகே நடந்து சென்றபோது, அவ்வழியே இருச்சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 3 பேர் வடுவம்பாள் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். அப்போது, அவர்கள் சென்ற இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில் முத்துப்பேட்டை தொண்டியக்காடு பிரவீன், கீழவாழாடிக்காடு முத்துவேல் ஆகிய இரண்டு பேரும் கைது செய்யப்பட்டனர். இதில் கீழவாழாடிக்காடு பிரதீப் (21) தப்பி ஓடி தலைமறைவானார்.
இதையடுத்து, பெருகவாழ்ந்தான் காவல் ஆய்வாளர் சுப்ரியா தலைமையில் போலீஸார் தனிப்படை அமைத்து, பிரதீப்பை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
பின்னர் மூன்று பேரிடமும் போலீஸார் நடத்திய மேல் விசாரணையில் முத்துப்பேட்டை, இடும்பாவனத்தில் பெண்ணிடம் மூன்றரை பவுனும், மன்னார்குடியை அடுத்த கீழநாகையில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் ஐந்தரை பவுன் நகையையும் பறித்த வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட மூன்று பேரையும், மன்னார்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி அருண்குமார் முன்பு போலீஸார் செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.