கூத்தாநல்லூர் வட்டம் , லெட்சுமாங்குடி அன்னை கஸ்தூரிபா காந்தி மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு பள்ளித் தாளாளர் என்.ஏ. சையத் நாசர் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் பி. செந்தில்குமார் முன்னிலை வகித்தார். துணை முதல்வர் சுதா வரவேற்றார். மாணவர்கள் ஏ. முகிலன், ஜி. முகம்மது அனஸ், கே. ரம்யதர்சினி, எஸ். சுமையா பஹிமா உள்ளிட்ட மாணவர்கள் மறைந்த முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேருவைப் பற்றி பேசினர்.
மேலும், பள்ளி குழந்தைகளுக்கிடையே நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
அரசு மேல்நிலைப் பள்ளியில்...
திருத்துறைப்பூண்டி, நவ.14: திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா மற்றும் மறைந்த பாரத பிரதமர் ஜவாஹர்லால் நேரு 128-ஆவது பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் எம்.எஸ். பாலு தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் எம்.ஈ.ஏ.ஆர். அப்துல் முனாப் முன்னிலை வகித்தார். திருத்துறைப்பூண்டி டெல்டா ரோட்டரி சங்கத் தலைவர் எம்.ஐ. சுராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, நேருவின் பெருமை குறித்துப் பேசினார்.
நிகழ்ச்சியில், "நேருவும், குழந்தைகளும்' என்ற தலைப்பில் மாணவ மாணவிகள் பேசினர். மேலும் தேசிய ஒருமைப்பாட்டு பாடல்கள், நடனம், சிலம்பாட்டம், தப்பாட்டம் போன்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நிகழ்ச்சியில் தமிழாசிரியை ஜா. வேம்பு வரவேற்றார். முதுகலை தமிழாசிரியர் அ. ஐயப்பன் நன்றி கூறினார். நிகழ்ச்சியை தமிழாசிரியை கே. மதுராந்தகி தொகுத்து வழங்கினார்.