திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் செயல்படும் சார்பதிவாளர் அலுவலகத்தை மூட முடிவு செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில் வருவாய்த் துறை எல்லை சீரமைப்பைத் தொடர்ந்து, தஞ்சை, நாகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள 49 சார்பதிவாளர் அலுவலகங்களை மூட அரசு தீர்மானித்துள்ளது.இதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பதிவுத்துறை தலைவர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி திருக்குவளை, தகட்டூர், திருப்பூண்டி, வேதாரண்யம், கூத்தாநல்லூர் மற்றும் முத்துப்பேட்டை சார்பதிவாளர் அலுவலகங்கள் ஆள்குறைப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மூடப்பட உள்ளன.
இதில் திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் நூறாண்டுகள் பழைமையான சார்பதிவு அலுவலகத்தை மூட கூடாது என அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், முத்துப்பேட்டை ஒன்றிய, நகர திமுக சார்பில் முத்துப்பேட்டை சார்பதிவு அலுவலகத்தை முற்றிலுமாக நீக்கி திருத்துறைப்பூண்டி அலுவலகத்தோடு இணைக்க முற்படும் தமிழக அரசைக் கண்டித்து மன்னை சாலையில் உள்ள சார்பதிவு அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ப. ஆடலரசன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் மனோகரன், அவைத் தலைவர் ராமஜெயம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நாகை முன்னாள் மக்களவை உறுப்பினர் ஏ.கே.எஸ். விஜயன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்துப் பேசினார். இதில், திமுக மாவட்ட துணைச் செயலாளர் எம்.எஸ். கார்த்திக், காங்கிரஸ் சார்பில் வட்டாரத் தலைவர் பாலகிருஷ்ணன், நகரத் தலைவர் ஜெகபர் அலி, வர்த்தகக் கழகத் தலைவர் இராஜாராமன், இந்திய கம்யூனிஸ்ட்கட்சி ஒன்றியச் செயலாளர் கே. முருகையன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் கே.வி. ராஜேந்திரன், , விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒன்றியச் செயலாளர் மீனாட்சி சுந்தரம், முஸ்லீம் லீக் மாவட்டத் தலைவர் முகைதீன் அடுமை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.