நீடாமங்கலம் வட்டம், வடுவூர் அக்ரஹாரம் பேருந்து நிறுத்தம் அருகே டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் விதமாக பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நீடாமங்கலம் வட்டத்தில் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் விதமாக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத் துறை அலுவலர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, வடுவூர் அக்ரஹாரம் பேருந்து நிறுத்தம் அருகே பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில், நீடாமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஞானம், ராயபுரம் வட்டார மருத்துவ அலுவலர் ராணி முத்துலட்சுமி ஆகியோர் பங்கேற்று, பொதுமக்களுக்கு தலா 50 மில்லி அளவில் நிலவேம்பு குடிநீரை வழங்கினர். முகாமில் சுமார் 300 பேருக்கு குடிநீர் வழங்கப்பட்டது.
இதில் வடுவூர் மருத்துவ அலுவலர் தினேஷ், சித்த மருத்துவ அலுவலர் வினோத், சுகாதார ஆய்வாளர்கள் பார்த்திபன், கவியரசன், ராஜேந்திரன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.