நீடாமங்கலம் வட்டாரத்திலுள்ள ஆதனூர் கிராமத்தில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோள வயல்களில் வயல்தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆ.பாஸ்கரன் தலைமை வகித்தார். நீடாமங்கலம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் வே.தேவேந்திரன் முன்னிலை வகித்தார். விழாவில் திருவாரூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் க.மயில்வாகனன் பேசியது: குறைந்தளவே தண்ணீர் தேவைப்படும் மக்காச்சோளமானது தண்ணீர் தேங்கி நிற்காத பகுதிகளுக்கு மிகவும் சிறந்த மாற்றுப் பயிராகும். குறைந்த செலவில் சாகுபடி செய்து, மிகுந்த மகசூல் பெற்று அதிக லாபம் பெற முடியும் என்றார். மேலும் கோழித் தீவனத் தயாரிப்புக்கு முக்கிய மூலப் பொருளாக மக்காச்சோளம் இருப்பதால் ஆண்டு முழுவதும் தேவைப்படும் மிகவும் முக்கிய பயிராகும் எனத் தெரிவித்தார்.
பூச்சியியல் துறை உதவி பேராசிரியர் ராஜா.ரமேஷ் பேசியது: தற்போது மக்காச்சோளத்தை அறுவடை செய்வதற்கு இயந்திரங்கள் உள்ளதால் எளிதாக அறுவடை செய்ய முடியும் என்றும், வேளாண்மை அறிவியல் நிலையமே விவசாயிகள் சிரமமில்லாமல் விற்பனை செய்வதற்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருப்பதனையும் தெரிவித்தார்.
இந்த வயல் தின விழாவில் விவசாயிகள், தஞ்சாவூர் ஆர்விஎஸ் வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள், திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மாணவிகள், தஞ்சாவூர் வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் மற்றும் வேளாண்மை உதவி அலுவலர் ஏழுமலை ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தத்திட்டத்தின் வாயிலாக திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகள் மக்காச்சோள சாகுபடி மேற்கொள்ள மிகுந்த ஆர்வம் காட்டியதையும், இனி வரும் ஆண்டுகளில் நிலவள நீர் வளத்திட்டத்தின் வாயிலாக மக்காச்சோளப் பரப்பளவு அதிகரிக்கும் என்றும் அதன் பொருட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் உயர்வதற்கு வழிவகை ஏற்படும் எனவும் விவசாயிகளிடம் தெரிவிக்கப்பட்டது.