தீபாவளி பண்டிகையையொட்டி உணவகங்கள் இரவு நேரத்தில் கூடுதல் நேரம் செயல்பட அனுமதியளிக்க வேண்டும் என, மன்னார்குடி ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர் காவல்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக, மன்னார்குடி ஹோட்டல் உரிமையாளர்கள் சங்க பொதுச் செயலர் தனம். நாராயணன், மன்னார்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் வ. அசோகனிடம் அளித்த கோரிக்கை மனு: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மன்னார்குடியில் உள்ள ஹோட்டல்களை இரவு 11 மணி வரை திறந்து வைத்திருக்கலாம் என சாதாரண நாள்களில் உள்ள உத்தரவைத் தளர்த்தி, பொதுமக்கள், வர்த்தகர்களின் நலன் கருதி இரவு 1 மணி வரை கடையை திறந்து வைத்து, வியாபாரம் செய்ய தாற்காலிக அனுமதி அளிக்க வேண்டும் என அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மனு அளிக்கும்போது, சங்க பொருளாளர் எம்.பி. இராவணன், துணைத் தலைவர் ஆர். பாரதிதாசன் ஆகியோர் உடனிருந்தனர்.