திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையை அடுத்த ஜாம்பவானோடை சேக்தாவூது ஆண்டவர் தர்கா வளாகத்தில் உள்ள ஆற்றங்கரை பாதுஷா ஆண்டவர் தர்காவின் 6-ஆம் ஆண்டு கந்தூரி விழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக மாலை 4.30 மணிக்கு சேக்தாவூது ஆண்டவர் தர்காவிலிருந்து கண்ணாடியால் அலங்கரிக்கப்பட்ட ரதத்துடன் கந்தூரி ஊர்வலம் புறப்பட்டு ஆற்றங்கரை தர்காவை வந்தடைந்தது. பின்னர், தர்காவில் புனித மெளலூது சரீப் ஓதப்பட்டு உலக அமைதிக்காக பிரார்த்தனை நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து, தர்கா வாசலில் உள்ள புனித கொடி மரத்தில் தர்கா முதன்மை அறங்காவலர் எஸ்.எஸ். பாக்கர் அலி சாஹிப், அறங்காவலர் தமீம் அன்சாரி சாஹிப் ஆகியோர் தலைமையில் புனிதக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது.
இதில் நூர்முகமது லெப்பை, டிரஸ்டி ஜெக்கரியா சாஹிப் மற்றும் முத்துப்பேட்டை நாச்சிக்குளம், அதிராம்பட்டினம், துளசியாப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர்.