மீனவ சமுதாய இளைஞர்களுக்கு போட்டித் தேர்வு குறித்து பயிற்சியளிக்கப்படவுள்ளதால், தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மீன்வளத்துறை மற்றும் சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம் (அகில இந்திய குடிமைப்பணிகளுக்கான பயிற்சி நிலையம்) சார்பில் ஆண்டுதோறும் மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த 20 பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து, அவர்கள் போட்டித் தேர்வில் வெற்றி பெற பயிற்சியளிக்கப்படுகிறது.
கடல் மற்றும் உள்நாட்டு மீனவக் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் குழந்தைகள் இப்பயிற்சி திட்டத்தில் சேரலாம். பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்பப்படிவம் மற்றும் அரசு வழிக்காட்டுதல்களை மீன்வளத் துறையின் www.fisheries.tn.gov.in இணையதளத்திலிருந்து கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது விண்ணப்பப் படிவங்களை மண்டல மீன்துறை, இணை இயக்குநர்கள் மற்றும் மாவட்ட மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை திங்கள்கிழமை (அக்.23) மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு திருவாரூர் மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை 04366-224140 என்ற தொலைபேசி எண்ணிலும், நாகப்பட்டினம் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஒருங்கிணைந்த மீன்வளத்துறை வளாகத்தை 04365- 253010 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.