மன்னார்குடி அருகே அங்கன்வாடி பெண் ஊழியரிடம் சங்கிலியைப் பறித்துச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
மன்னார்குடியை அடுத்த வடுவூரைச் சேர்ந்த சண்முகசுந்தரம் மனைவி உமா (45). இவர், அங்குள்ள அங்கன்வாடியில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், மன்னார்குடியில் உள்ள ஊட்டச்சத்து அலுவலகத்துக்குப் பணி நிமித்தமாக திங்கள்கிழமை சென்ற உமா, அங்கு பணியை முடித்துக்கொண்டு மாலையில் வடுவூருக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பிக்கொண்டிருந்தார்.
மன்னார்குடி- தஞ்சாவூர் நெடுஞ்சாலையில், நெடுவாக்கோட்டை பகுதியில் மற்றொரு இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர், திடீரென உமாவை தாக்கி, கீழே தள்ளிவிட்டு, அவர் அணிந்திருந்த 7 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றுவிட்டார்.
கீழே விழுந்ததால் படுகாயமடைந்த உமா, சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து, மன்னார்குடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபரைத் தேடிவருகின்றனர்.