காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, திருவாரூரில் அரசு பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்டத் தலைவர் செல்வமணி தலைமை வகித்தார். இதில், மாநில துணைத் தலைவர் அண்ணாதுரை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வரும் மத்திய அரசைக் கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் கோஷமிடப்பட்டது.