திருக்குவளை, திருவாரூரில் கருணாநிதி உருவப் படத்துக்கு ஸ்டாலின் மலரஞ்சலி

நாகை மாவட்டம், திருக்குவளையில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பூர்வீக இல்லம், திருவாரூரில் உள்ள கலைஞர் இல்லத்தில் கருணாநிதியின் உருவப் படத்துக்கு திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின்

நாகை மாவட்டம், திருக்குவளையில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பூர்வீக இல்லம், திருவாரூரில் உள்ள கலைஞர் இல்லத்தில் கருணாநிதியின் உருவப் படத்துக்கு திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை மலரஞ்சலி செலுத்தினார்.
மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி பிறந்த இல்லம், நாகை மாவட்டம், திருக்குவளையில் முத்துவேலர் நூலகம் -அஞ்சுகம் படிப்பகமாக உள்ளது. இங்கு, சனிக்கிழமை வந்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தனது பாட்டி அஞ்சுகம், தாத்தா முத்துவேலர் ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 
பின்னர், அந்த இல்லத்தில் கருணாநிதியின் புதிய உருவப் படத்தை திறந்து வைத்து, மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினார். மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, உதயநிதி ஸ்டாலின், கனிமொழியின் கணவர் அரவிந்தன், முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, க. பொன்முடி ஆகியோர் உடனிருந்து அஞ்சலி செலுத்தினர். 
வீட்டில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த படங்கள் சிலவற்றின் நினைவுகளை உதயநிதி ஸ்டாலின், கனிமொழியுடன் ஸ்டாலின் பகிர்ந்து கொண்டார். பின்னர், குடும்பத்தினருடன் வீட்டின் தோட்டத்தில் சில நிமிடங்கள் அமர்ந்திருந்தார். 
இதனிடையே, ஸ்டாலின் வருகை குறித்து தகவலறிந்த திருக்குவளை பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையில், கருணாநிதியின் பூர்வீக இல்லத்தில் அமைதியாக திரண்டிருந்தனர். அவர்களுக்கு, ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகியோர் நன்றி தெரிவித்தனர். சனிக்கிழமை பகல் சுமார் 12.35 மணி அளவில் திருக்குவளை இல்லத்துக்கு வந்த ஸ்டாலின் சுமார் 25 நிமிடங்களில் அங்கிருந்து புறப்பட்டார்.
நாகை மாவட்ட திமுக பொறுப்பாளர் என். கெளதமன், திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கே. கலைவாணன், மக்களவை முன்னாள் உறுப்பினர் ஏ.கே.எஸ். விஜயன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உ. மதிவாணன், டி.ஆர்.பி. ராஜா, மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் உடனிருந்தனர். 
திருவாரூரில்...
திருவாருரில் உள்ள கலைஞர் இல்லத்தில், கருணாநிதியின் உருவப் படத்துக்கு திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள கலைஞர் இல்லத்துக்கு திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை பிற்பகல் வருகை தந்தார். கலைஞர் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப் படத்துக்கு மலர் மாலை அணிவித்தும், மலர் தூவியும் அவர் அஞ்சலி செலுத்தினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com