காலமுறை ஊதியம் வழங்கக் கோரி, சென்னையில் கிராம உதவியாளர் சங்கத்தினர் குடும்பத்துடன் முறையீடு செய்வது என முடிவெடுக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்க மாநில பொதுச் செயலர் எஸ். தமிழ்ச்செல்வன் கூறினார்.
இதுகுறித்து நீடாமங்கலத்தில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: 30 ஆண்டுகளாக வருவாய்த் துறையின் கீழ் பணியாற்றும் கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்காமல் தொடர்ந்து அரசு அமைத்த ஊதியக்குழு பரிந்துரையில் 5 முதல் 8-ஆவது ஊதியக்குழு வரை கிராம உதவியாளர்கள் வஞ்சிக்கப்பட்டு வருகிறார்கள்.
எனவே, கிராம உதவியாளர்களுக்கு அலுவலக உதவியாளர்களுக்கு இணையான காலமுறை ஊதியம் ரூ. 15,700 இதர படிகள் அடிப்படை ஊதியமாக வழங்க வேண்டும்.
பணியிலிருந்து ஓய்வு பெறும் கிராம உதவியாளர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு வழங்குவதுபோல் கடைசி மாதம் பெற்ற ஊதியத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக வழங்க வேண்டும், வியாழக்கிழமை (பிப்.15) மற்றும் பிப்.16-இல் 2 நாள் காத்திருப்புப் போராட்டம் அனைத்து வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெறுகிறது.
கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 9-ஆம் தேதி சென்னை வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகம் முன் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கிராம உதவியாளர்கள் தங்களது குடும்பத்துடன் பங்கேற்று முறையிட முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.