திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை தெற்குத்தெரு மீனவர் கூட்டுறவு சங்க அலுவலகத்தில் தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்ட மீன்வளத்துறை சார்பில், மீன்பிடி உடைமைகளுக்கான காப்பீடு திட்டம் குறித்த சிறப்பு கருத்தரங்குக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு கண்காணிப்பு மற்றும் திட்ட அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். மீனவர் கூட்டுறவு சங்க துணைத் தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.
இதில் சுனாமிக்குப்பின் நிலைத்த வாழ்வாதாரத் திட்ட மாவட்ட செயலாக்க அலுவலர் விஜயன், திருவாரூர் மீன்வளத்துறை உதவி இயக்குநர் ஜெயராஜ் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், மீனவர்களின் மீன்பிடிப் படகுகள், இயந்திரம் போன்றவைகளுக்கு இயற்கை பேரிடர் மற்றும் தனி விபத்துகளால் ஏற்படும் மொத்த சேதங்களுக்கு காப்பீடு செய்வதே மீன்பிடி உடைமைகளுக்கான பாதுகாப்பு எனவும், அதன் தகுதிகள், காப்பீட்டில் சேர வேண்டிய தகுதிகள், அதன் பயன்கள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. கூட்டத்தில் தெற்குத்தெரு, பேட்டை, துறைக்காடு உள்ளிட்ட பகுதி மீனவர்கள் கலந்துகொண்டனர்.