திருவாரூர் அருகே, சனிக்கிழமை தனியார் ஆம்னி பேருந்து கவிழ்ந்த விபத்தில் 15-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
சென்னையிலிருந்து திருவாரூர் அருகேயுள்ள கூத்தாநல்லூருக்கு தனியார் ஆம்னி பேருந்து வெள்ளிக்கிழமை இரவு புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. சுமார் 40 பயணிகள் பயணம் செய்த இப்பேருந்தை மனவாளம்பேட்டையைச் சேர்ந்த ரஜினி என்பவர் ஓட்டி வந்தார். பேருந்து நன்னிலம் அருகே பனங்குடி என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதையறிந்து, அப்பகுதியினர் உடனடியாக பேருந்திலிருந்த ஜெயசுதா, உமாதேவி, ரஞ்சித்குமார், மணிகண்டன் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டவர்களை மீட்டு திருவாருர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வருகின்றனர். விபத்து, சாலை பழுது மற்றும் பனி மூட்டம் காரணமாக ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நன்னிலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.