பொங்கல் விழாவை முன்னிட்டு, ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் சூரியபகவானுக்கு சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதேபோல், நீடாமங்கலம் சந்தானராமர் கோயில் உள்ளிட்ட திருக்கோயில்களிலும் பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற, இக்கோயில் நவக்கிரக தலங்களில் குரு பகவானுக்குரிய பரிகார தலமாக விளங்குகிறது. வரலாற்றுச்சிறப்புமிக்க இக்கோயிலில் பொங்கல் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி, அதிகாலை அனைத்து சன்னிதிகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, சூரியபகவானுக்கு பொங்கல் வைத்து நிவேதனம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும், மகாதீபாராதனை காட்டப்பட்டது. அர்ச்சகர் ரமேஷ்சுவாமிநாதசிவாச்சாரியார் பூஜைகளை நடத்தினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல், ஆலங்குடி அபயவரதராஜப்பெருமாள் கோயில், நீடாமங்கலம் சந்தானராமர் கோயில், வீரஆஞ்சநேயர் கோயில், பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.