மன்னார்குடி அருகே செவ்வாய்க்கிழமை அரசுப் பேருந்தும், சிமென்ட் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இரண்டு ஓட்டுநர்களும் காயமடைந்தனர்.
திருத்துறைப்பூண்டியிலிருந்து தஞ்சைக்கு சென்ற அரசுப் பேருந்தும், அரியலூரிலிருந்து சிமென்ட் ஏற்றி வந்த லாரியும் மன்னார்குடி - திருத்துறைப்பூண்டி பிரதான சாலையில் கோட்டூரை அடுத்த சத்திரம் என்ற இடத்தில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இதில் பேருந்து, லாரியின் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன. இதில் காயமடைந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் அந்தோணிசாமி (48) திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையிலும், லாரி ஓட்டுநர் திருமானூரைச் சேர்ந்த ராஜமணிகண்டன் (32) மன்னார்குடி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து இரு தரப்பினரும் தனித்தனியே கோட்டூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.