ரயில்வே தண்டவாளங்களைப் பாதுகாக்க ஏஜென்சி மூலம் தினக் கூலிகளை நியமிப்பதைக் கைவிட வேண்டும் என தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்த யூனியனின் துணைப் பொதுச் செயலர் மனோகரன் வெளியிட்டுள்ள அறிக்கை: 67,368 கிலோ மீட்டர் தூரப்பாதையையும் அதிலுள்ள பெரிய மற்றும் சிறிய அளவிலான 1,44,698 பாலங்களும் ரெயில்வேயில் உள்ளன.
கடும் மழை, மூடுப்பனி, வெப்பக் காற்று பருவக் காலங்கள் மற்றும் போராட்டக் காலங்கள் உள்ளிட்டவைகள் பல மாதங்கள் தொடர்ந்து நீடிக்கிறது. இதுபோன்ற நேரங்களில் தண்டவாளத்தைப் பாதுகாக்க பராமரிப்பவர்களைப் பணியமர்த்துவது ரயில்வே துறையின் வழக்கம். ஆனால், தற்போது ரயில்வே துறை அனுபவம் இல்லாதவர்களை தண்டவாளப் பாதுகாப்பு பணிக்கு ஏஜென்சி மூலம் ஆள்களை நியமிக்க ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. தண்டவாளப் பாதுகாப்புக்கு அனுபவம் மற்றும் கடமை உணர்வு மிக முக்கியம்.
எனவே, தினக்கூலி ஆள்களை பாதுகாப்புப் பணிக்கு அமர்த்துவது ரயில்வேயின் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தாது என்பதால், பருவக் காலங்களில் ரயில் தண்டவாளத்தைப் பாதுகாக்க ஏஜென்சி மூலம் தினக்கூலிகளை நியமனம் செய்யும் திட்டத்தைக் கைவிட வேண்டும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.