திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே அனுமதியின்றி மணல் ஏற்றிச் சென்ற லாரிகளை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர்.
முத்துப்பேட்டை அருகேயுள்ள ஜாம்பவானோடை சிவராமன் நினைவு ஸ்தூபி அருகே முத்துப்பேட்டை காவல் ஆய்வாளர் ராஜேஷ் தலைமையில் போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஜாம்பவானோடை நோக்கிச் சென்ற லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில், அனுமதியின்றி மணல் ஏற்றிச் சென்றது தெரியவந்தது.
மேலும் விசாரணையில், தஞ்சை மாவட்டம், தம்பிக்கோட்டை பகுதியில் உள்ள ஆற்றிலிருந்து மணல் ஏற்றிக்கொண்டு, ஜாம்பவானோடை வடகாடு பகுதிக்கு கொண்டு சென்றது தெரியவந்தது.
இதுதொடர்பாக, லாரியை போலீஸார் பறிமுதல் செய்ததுடன், லாரி ஓட்டுநரான சேலம் மாவட்டம், கவுண்டர் வட்டம் பகுதியைச் சேர்ந்த கனகராஜை கைது செய்தனர்.
இருவர் கைது, லாரி பறிமுதல்:
முத்துப்பேட்டை அருகே அனுமதியின்றி லாரியில் மணல் ஏற்றிச் சென்றது தொடர்பாக, இருவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
தம்பிக்கோட்டை பகுதியில் உள்ள ஆற்றிலிருந்து மணல் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் ஆய்வாளர் ராஜேஷ், சிறப்பு உதவி ஆய்வாளர் குணசேகரன் ஆகியோர் தலைமையிலான போலீஸார், அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, லாரியில் மணல் ஏற்றிக்கொண்டிருந்த தம்பிக்கோட்டையைச் சேர்ந்த குமார் (46), வேதாரண்யம் மணக்காட்டைச் சேர்ந்த நடராஜன் (38) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
மேலும், மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரியையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய தம்பிக்கோட்டையைச் சேர்ந்த செந்தில்குமார், திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த சொக்கலிங்கம் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.