நீடாமங்கலத்தில் திரைப்பட நடிகர் ஆர்யா நடிக்கும் எங்க வீட்டு மாப்பிள்ளை படப்பிடிப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆர்யா நடிக்கும் எங்க வீட்டு மாப்பிள்ளை சின்னத்திரை படம் (ரியாலிட்டி ஷோ) தமிழில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு ஒளிபரப்பாகிறது. இப்படத்தை மும்பை புரொடக்க்ஷன் தயாரிக்கிறது. படத்தை இயக்குநர் கார்த்திக் இயக்குகிறார். இப்படத்தில் ஆர்யாவுக்கு பெண் பார்க்கப்படுகிறது.
இதில், அவர் தேர்வு செய்த பெண்களில் ஒருவர் தான் பழைய நீடாமங்கலம் சாலையில் வசிக்கும் அபர்ணாதி. இவர் பேஷன் டெக்னாலஜி படித்துள்ளார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை நடிகர் ஆர்யாவுடன் படப்பிடிப்புக் குழுவினர் 45 பேர் அபர்ணாதி வீட்டுக்கு வந்தனர். அப்போது, நடிகர் ஆர்யாவுக்கு தவில் வித்வான் நீடாமங்கலம் காமாட்சிசுந்தரம், அவரது மகன் கார்த்திக் குழுவினர் நாகசுர இன்னிசை வரவேற்பு அளித்தனர்.
அபர்ணாதி வீட்டில் வாழை மரம் கட்டப்பட்டு வண்ண மின்விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தன. பகலில் படப்பிடிப்பு வீட்டில் நடைபெற்றது. மாலையில் அபர்ணாதியும் ஆர்யாவும் நீடாமங்கலம் சதுர்வேத விநாயகர் மகா மாரியம்மன் கோயில், காசி விசுவநாதர் கோயில் ஆகிய கோயில்களில் சுவாமி தரிசனம் செய்தனர். அக்காட்சிகள் படமாக்கப்பட்டன. தொடர்ந்து, அபர்ணாதி வீட்டில் படப்பிடிப்பு நடைபெற்றது.
படப்படிப்பின்போது, ஆர்யாவை சந்திக்கவும், புகைப்படம் எடுக்கவும் யாருக்கும் அனுமதியளிக்கவில்லை.
படப்பிடிப்புக்கு நீடாமங்கலம் போலீஸார் பாதுகாப்பு அளித்தனர். படப்பிடிப்பு முடிந்தவுடன் இரவு படப்பிடிப்புக் குழுவினர் திருச்சி சென்றனர். புதன்கிழமை (மார்ச் 14) திருச்சி மாவட்டம், மணப்பாறையில் படப்பிடிப்பு நடைபெறும் எனக் கூறப்படுகிறது.
16 பெண்களை பார்த்து அதில் ஒருவரையே தனது வாழ்க்கை துணைவியாக ஆர்யா திருமணம் செய்து கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டது.