நீடாமங்கலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை தாக்கியவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
நீடாமங்கலம் அருகேயுள்ள ஒளிமதியைச் சேர்ந்தவர் ஜான்கென்னடி (38). இவர் நீடாமங்கலத்தில் ஸ்டூடியோ நடத்தி வருகிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியக் குழு உறுப்பினராக உள்ளார். இவருக்கும் ஒளிமதி ஓடத்துறையைச் சேர்ந்த சிலருக்கும் ஆற்றில் மணல் அள்ளுவது தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது.
இந்நிலையில், திங்கள்கிழமை இரவு ஜான்கென்னடிக்கும் ஒளிமதி ஓடத்துறையை சேர்ந்த பாலசுப்பிரமணியன், சுரேஷ், உதயகுமார் ஆகியோருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் ஜான்கென்னடியை தாக்கியதாக கூறப்படுகிறது. காயமடைந்த ஜான்கென்னடி மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இதுகுறித்து நீடாமங்கலம் போலீஸார் வழக்குப் பதிந்து சுரேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.