திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் ஊராட்சி நாச்சிக்குளம் கிராமத்தில், திங்கள்கிழமை தனது மகன் கொலை சம்பவத்தில் தொடர்பு இருப்பதாகக் கருதி இளைஞரைக் கத்தியால் குத்திய நபரை போலீஸார் தேடிவருகின்றனர்.
முத்துப்பேட்டை அருகே உள்ள நாச்சிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல் அஜீஸ் . இவரது மகன் மாஜித் முகம்மது(13), அதேபகுதியில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். அப்பகுதியைச் சேர்ந்த முகம்மது அக்பரின் மகன் அப்துல் கலாம் ஆசாத்(16) பத்தாம் வகுப்பை பாதியில் நிறுத்திவிட்டார். மாஜித் முகம்மதுவும், அப்துல்கலாம் ஆசாத்தும் நண்பர்கள்.
இந்நிலையில் கடந்த ஆண்டு மாஜித் முகம்மது வைத்திருந்த செல்லிடப்பேசியை அப்துல் கலாம் ஆசாத், தவறுதலாகக் கீழே போட்டு உடைத்துவிட்டார். அதைச் சரி செய்து தருமாறு கேட்ட மாஜித் முகம்மதுவை, அப்துல் கலாம் ஆசாத் கழுத்தை நெரித்துக் கொன்றதாகக் கூறப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.
இந்தநிலையில் மாஜித் முகம்மதுவின் வீட்டின் எதிரே உள்ள முகைதீன் அப்துல் காதர்(29), மாலத்தீவில் இருந்து அண்மையில் சொந்த ஊர் திரும்பினார். தனது மகன் கொலைக்கு இவரும் காரணம் என்று கருதிய அப்துல் அஜீஸ், முகைதீன் அப்துல் காதரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிவிட்டாராம்.
பலத்த காயம் அடைந்த அவர், திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். முத்துப்பேட்டை போலீஸார் வழக்குப்பதிந்து தலைமறைவான அப்துல் அஜீஸை தேடிவருகின்றனர்.