திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம், மன்னார்குடி ஒன்றியப் பகுதிகளில் ரூ. 10.44 லட்சம் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் இல.நிர்மல்ராஜ் புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நீடாமங்லம் ஒன்றியம், கோவில்வெண்ணி ஊராட்சியில் வீட்டில் ரூ. 12 ஆயிரம் மதிப்பில் தனிநபர் இல்லக் கழிப்பறை கட்டடப் பணிகளைப் பார்வையிட்டு, அரசு விதிமுறைகளுக்குள்பட்டு கழிப்பறைகள் கட்டப்பட்டு வருகிறதா என ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, எடகீழையூர் பம்பாளி தெருவில் பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டத்தின் கீழ் ரூ. 1.70 லட்சம் மதிப்பில் குடியிருப்பு கட்டடப் பணிகளைப் பார்வையிட்டு, கட்டடப் பணிகள் குறித்தும், அரசின் மூலம் இதுவரை வழங்கப்பட்ட தொகை உள்ளிட்டவைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
பின்னர், மன்னார்குடி ஒன்றியம், பழையனூர் ஊராட்சியில் பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் குடியிருப்பு கட்டடப் பணிகளைப் பார்வையிட்டு, பணிகள் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்டறிந்தார்.
மேலும், திட்டத்தின் பயன் குறித்து பயனாளிகளிடமும் கேட்டு அறிவுரைகள் வழங்கினார்.
மன்னார்குடி ஒன்றியம், பருத்திக்கோட்டை ஊராட்சியில் ரூ. 12 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் தனிநபர் இல்லக் கழிப்பறையைப் பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், அங்கு பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் கட்டடப் பணிகளையும் அவர் பார்வையிட்டார்.
நிகழ்வில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் தெய்வநாயகி, செயற்பொறியாளர் செல்வராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.