திருவாரூர் அருகே மணல் குவாரியை மூட வலியுறுத்தி சடலத்துடன் சாலை மறியல் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகேயுள்ள மூங்கில்குடியைச் சேர்ந்தவர்கள் வினோத்குமார் (27), கவியரசன் (25). இவர்கள் இருவரும் புதன்கிழமை இருசக்கர வாகனத்தில் சொரக்குடி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, அவ்வழித்தடத்தில் எதிரே வந்த மணல் லாரி மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவலறிந்த நன்னிலம் போலீஸார் அங்கு சென்று வினோத்குமார், கவியரசன் ஆகியோரின் சடலத்தை மீட்டு திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற் கூராய்வுக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் வியாழக்கிழமை வினோத்குமார், கவியரசன் ஆகியோரின் சடலம் உடற் கூராய்வுக்குப் பிறகு சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லும்போது, காக்காகோட்டூர் என்னுமிடத்தில் சடலத்தை வைத்து விபத்துக்கு காரணமான குவளைக்கால் மணல் குவாரியை மூடவேண்டும், குவாரி உரிமையாளரை கைது செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த போலீஸார், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன்பேரில் சாலை மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது. மறியலால் திருவாரூர் - மயிலாடுதுறை சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.