நெல் தரிசில் பயறு வகைப் பயிர் சாகுபடியில் பூச்சி மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்தி கூடுதல் மகசூல் பெறுவதற்கான தொழில்நுட்பப் பயிற்சி பேரளத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு நீர்வள நிலவளத் திட்டத்தின்கீழ் பேரளத்தில், நன்னிலம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் லட்சுமிகாந்தன் தலைமையில் நடைபெற்ற இப்பயிற்சியில், நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியர் ராஜா. ரமேஷ் பங்கேற்று பேசியது:
பயறு வகைப் பயிர்களை பூச்சி மற்றும் நோய்களிலிருந்து பாதுகாக்கும் ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறைகளான உயிரியல் முறை விதை நேர்த்தி, டிரைக்கோகர்மா கைலோனிஸ் முட்டை ஒட்டுண்ணி, ஒட்டும் அட்டைப்பொறி, இனக்கவர்ச்சி பொறி, வேம்பு உள்ளிட்ட தாவரப் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தலாம். ரசாயன உரங்களை அதிகம் பயன்படுத்தாமல் நன்மை செய்யும் உயிரினங்களைப் பாதுகாத்து பெருக்கி இயற்கை முறையில் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம். விவசாயிகள் இம்முறையை கையாண்டு கூடுதல் மகசூல் பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றார் அவர்.
வேளாண்மை அறிவியல் நிலைய பயிற்சி உதவியாளர் தசரதன் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.