முத்துப்பேட்டை கடலோரப் பகுதி அலையாத்திக் காடுகளில் தீவிரவாதத் தடுப்பு ஒத்திகை பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் தீவிரவாதிகள் கடல் வழியாக புகுந்து தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அவ்வகையிலான கடல் வழி ஊடுருவலைத் தடுக்கும் தீவிரவாத ஒத்திகைப் பயிற்சி தமிழகம், புதுவை, ஆந்திரம், கேரளம் ஆகிய மாநிலங்களில் 2,018 கிலோ மீட்டர் தூரம் கடற்கரையில் வியாழக்கிழமை ஆபரேஷன் சாகர் கவாச் என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, முத்துப்பேட்டை கடலோர காவல் ஆய்வாளர் சின்னையன், சார்பு ஆய்வாளர் நீலகண்டன் ஆகியோர் தலைமையில் மாவட்ட காவல் துறை, மீன்வளத்துறை, வருவாய்த் துறையினருடன் இணைந்து முத்துப்பேட்டை கடலோரப் பகுதியில் தீவிரவாதத் தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஒத்திகையின்போது, நடுக்கடலில் மீன்பிடிப்படகுகள் சோதனை மற்றும் தீவிரவாதிகளின் ஊடுருவலின்போது தடுக்கும் வகையிலான நவீன யுக்திகள் குறித்து விளக்கப்பட்டது. இந்த ஒத்திகை நிகழ்வு 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் (மார்ச்.23) தொடர்கிறது.