திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் சட்டப் பேரவைத் தொகுதி முன்னாள் உறுப்பினர் பூபதி மாரியப்பன் (57) உடல் நலக்குறைவு காரணமாக சனிக்கிழமை காலமானார்.
நீடாமங்கலம் சர்வமான்ய அக்ரஹாரத்தில் வசித்து வந்த அவர், வலங்கைமான் தொகுதியின் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் ஆவார். இவர் இருதய நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த சில மாதங்களாகவே தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சனிக்கிழமை காலை 9 மணிக்கு அவர் உயிரிழந்தார். பின்னர் அவரது உடல் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் நீடாமங்கலத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
மறைந்த பூபதி மாரியப்பனுக்கு குரு என்கிற முருகராஜ், எம். செந்தில்குமார் ஆகிய இரண்டு மகன்களும், டாக்டர் எம். சக்திபிரியா என்கிற மகளும் உள்ளனர். பூபதி மாரியப்பனின் கணவர் மாரியப்பன் ஏற்கெனவே இறந்துவிட்டார்.
பூபதி மாரியப்பன் அ.தி.முக.வின் திருவாரூர் மாவட்ட மகளிரணி செயலாளராகவும், கட்சியின் செயற்குழு உறுப்பினராகவும் பொறுப்பு வகித்தவர். கடந்த 2001 சட்டப் பேரவைத் தேர்தலில் வலங்கைமான் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர், 2006-ஆம் ஆண்டு வரை சட்டப் பேரவை உறுப்பினராக பதவி வகித்தார்.
அவரது இறுதிச் சடங்கு ஞாயிற்றுக்கிழமை (மே 27) மாலை 4 மணிக்கு நீடாமங்கலத்தில் நடைபெறுகிறது. தொடர்புக்கு: 94439 00010.