திருவாரூரில் காணாமல் போன மாணவர், வேளாங்கண்ணி பகுதியில் சுற்றித்திரிவது கண்காணிப்பு கேமரா மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த மாணவரை தேடும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
திருவாரூர் புதுத்தெருவில் வசிப்பவர் சசிகுமார். இவர், திருமருகல் அருகே உள்ள புத்தகரம் ஊராட்சி செயலராகப் பணியாற்றி வருகிறார். இவரது மகன் ஹரிவசந்த் (13). இவர், திருவாரூரில் உள்ள தனியார் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், வியாழக்கிழமை காலை பள்ளிக்குச் சென்ற ஹரிவசந்த் மாலையில் வீட்டுக்கு திரும்பவில்லை. இதுகுறித்து, போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர், திருவாரூர் நகரப் பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்ததில், அந்த மாணவர் ஒரு பெண்ணுடன் செல்வது தெரியவந்தது. அந்த பெண்ணிடம் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், அந்த பெண் பேருந்து நிலையத்துக்குச் செல்லும்போது, தானும் பேருந்து நிலையத்துக்கு வருவதாகவும், எப்படி செல்லவேண்டும் என வழி தெரியவில்லை என சிறுவன் ஹரிவசந்த் கூறியதாகவும், இதனால், சிறுவனை பேருந்து நிலையம் வரை அழைத்துச் சென்றதாகவும் அந்த பெண் தெரிவித்துள்ளார். இதையடுத்து, நாகை, தஞ்சை பகுதிகளில் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், வேளாங்கண்ணி பகுதியில் ஹரிவசந்த் சுற்றித் திரிவது, அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வேளாங்கண்ணி பகுதியில் ஹரிவசந்தை போலீஸார் தேடிவருகின்றனர்.