திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தில் மின்சாரத்தைக் காணவில்லையென்று வர்த்தகர் சங்கம் சார்பில், நூதன முறையில் துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.
நீடாமங்கலம் பகுதியில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. அறிவிக்கப்படாத இந்த மின்வெட்டால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு ஊழியர்கள், வர்த்தகர்கள் என பல தரப்பினரும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், மின்சாரத்தைக் காணவில்லை என வர்த்தகர் சங்கம் சார்பில், பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டிருப்பது, நீடாமங்கலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது சமூக வலைதளத்திலும் விவாதப் பொருளாகியுள்ளது. இதையறிந்த மின்வாரிய அதிகாரிகள், வர்த்தகர் சங்க நிர்வாகிகளைத் தொடர்புகொண்டு, வருத்தம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. நீடாமங்கலத்தில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டைத் தடுத்திடும் வகையில், பேரூராட்சி பகுதிக்கென தனியாக துணைமின் நிலையம் அமைக்க வேண்டுமென அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்த போதிலும், அரசு செவிசாய்க்கவில்லை என்று பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.