நாட்டில் தீண்டாமை ஒழிய பாடுபட்டவர் டாக்டர் அம்பேத்கர் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு.
திருத்துறைப்பூண்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டாக்டர் அம்பேத்கர் சிலை நிறுவிய 25-ஆவது ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சியில் மேலும் அவர் பேசியது: அம்பேத்கர் வறுமையிலும் தொடர்ந்து உயர்கல்வி கற்று சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் நிர்ணய சட்ட வரைவுக் குழுத் தலைவராக பொறுப்பேற்று அனைத்து தரப்பு மக்களும் பாதிக்காத வகையில் அனைவருக்கும் சம உரிமை கிடைக்கும் வகையில் சட்ட முன்வடிவை தயாரித்த பெருமைக்குரியவர்.
மேலும், பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக போராடியதுடன் சமூகத்திலும் பொருளாதாரத்திலும் முன்னேற ஒடுக்கப்பட்டவர்களுக்கு அதிகாரம் கிடைக்க பாடுபட்டார். தவிர, சாதிய தீண்டாமை கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தேர்தல்களில் பொது வேட்பாளருக்கு ஒரு வாக்கும், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு ஒரு வாக்கு என இரட்டை வாக்குரிமையை அமுல்படுத்தி அவர்களையும் மக்களாட்சியில் இடம் பெற செய்தவர் என்ரால் அது மிகையாகாது.
மகாத்மா காந்தி இரட்டை வாக்குரிமை முறை சமூகத்தில் பிரிவை ஏற்படுத்தும் எனக் கூறிய போது, அதற்காக காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தி தாழ்த்தப்பட்டவர்களுக்கென தனித் தொகுதி அமைக்க காந்தியுடன் வரலாற்று சிறப்பு மிக்க புணே ஒப்பந்தம் மேற்கொண்டார். பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் மற்றும் ஆசிரியர், இதழாளர், எழுத்தாளர், சமூக நீதி புரட்சியாளர் என பன்முகத்தன்மை கொண்டவராக விளங்கினார்.
அம்பேத்கர் இயற்றிய அனைத்து தரப்பு மக்களுக்கும் பாதுகாப்பை வழங்கும் அரசியல் நிர்ணய சட்டம் சமூகக்தின் மிகச்சிறந்த ஆவணம் என உலக சட்ட வல்லுநர்களால் பாராட்டுப்பட்டவர். ரிசர்வு வங்கியை உருவாக்கியதிலும் பெரும் பங்கு வகித்தனர். அவருக்கு சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியதற்காகவும் , அரசியல் நிர்ணய சட்டத்தை வடிவமைத்து வழங்கியது மற்றும் பலேவேறு சிறப்புக்களை கருத்தில் கொண்டு அவர் மறைவுக்குப் பின்னர் மத்திய அரசு பாரத ரத்தனா விருது வழங்கி கெளரவித்துள்ளது பெருமைக்குரியது என்றார் நல்லகண்ணு.
கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் கோ. பழனிசாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ் தேசிய பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர்கள் கே. உலகநாதன், வை. சிவபுண்ணியம், திராவிடர் கழக மாநில நிர்வாகி பூவை.புலிகேசி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன், அதிமுக மாவட்ட துணைச் செயலர் விஸ்வநாதன், திருத்துறைப்பூண்டி சட்டப் பேரவை உறுப்பினர் ப. ஆடலரசன், விழா குழுச் செயலர் கு. நேரு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.