மன்னார்குடி அருகேயுள்ள புள்ளவராயன்குடிக்காடு அரசு உயர்நிலைப்பள்ளி, திருவாரூர் மாவட்ட அளவில், மத்திய, மாநில அரசின் தூய்மை பள்ளி விருது பெற்றுள்ளது.
மாவட்டத்தில் உள்ள 1,264 பள்ளிகளில், பள்ளியின் தூய்மை, சுகாதாரம், சுற்றுச்சூழல், கழிப்பறை வசதிகள் போன்ற பல அம்சங்களைக் கருத்தில்கொண்டு மத்திய, மாநில அரசுகளின் தேர்வுக் குழு, பள்ளிகள்தோறும் ஆய்வு நடத்தியதில் புள்ளவாராயன்குடிக்காடு அரசு உயர்நிலைப்பள்ளி தூய்மை பள்ளி விருதுக்கு தேர்வானது.
சென்னையில், அண்மையில் நடைபெற்ற இதற்கான விருது வழங்கும் விழாவில், இப்பள்ளித் தலைமையாசிரியர் ஆர். மணிவண்ணனிடம், தூய்மை பள்ளி விருது மற்றும் ரூ. 30,000 பரிசுத்தொகையை தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் வழங்கினார்.
திருவாரூர் மாவட்டத்திலேயே சிறந்த தூய்மை பள்ளிக்கான விருது பெற்றமைக்காக பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மாரிமுத்து, மாவட்டக் கல்வி அலுவலர்கள் விஜயா, ராமன் உள்ளிட்டோர் பாராட்டினர்.