வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடையே கல்லூரி தூதுவர்கள் ஏற்படுத்த வேண்டும் என, மாவட்ட ஆட்சியர் இல.நிர்மல்ராஜ் கேட்டுக்கொண்டார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் தொடர்பாக கல்லூரி தூதுவர்களுக்கானப் பயிற்சி வகுப்பை செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்து ஆட்சியர் பேசியது:
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி 01.01.2019 நாளை தகுதி நாளாகக் கொண்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தப் பணி 01.09.2018 முதல் 31.10.2018 வரை நடைபெற்று வருகிறது. இதற்காக, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப் பேரவை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல்கள் செப். 1 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அனைத்து வாக்குச்சாவடி மையங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், வருவாய்க் கோட்ட அலுவலகங்களில் வாக்காளர் பட்டியல் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.
மேலும் செப்.22, அக்.6, 13 ஆகிய தேதிகளில் சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. இக்கூட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் பார்வைக்கு வைக்கப்படும். பொதுமக்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இடம் பெற்றுள்ளதா என்பதையும், பெயர், வயது மற்றும் இதர விபரங்கள் சரியாக உள்ளதா என்பதையும் சரிபார்த்துக் கொள்ளலாம்.
மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் குறித்த சிறப்பு முகாம் வாக்குச் சாவடி மையங்களில் செப்.23, அக்.7, அக்.14 ஆகிய தேதிகளில் நடைபெறும். வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள், வாக்குச் சாவடி மையங்களில் பொதுமக்களிடமிருந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தங்கள் மேற்கொள்ள விண்ணப்பங்கள் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கல்லூரியில் பயிலும் இளைய வாக்காளர்கள் குறிப்பாக 18 முதல் 21 வயதுள்ள வாக்காளர்கள் தற்போது நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு முறைத் திருத்த காலத்தைப் பயன்படுத்தி கொள்ளலாம். கல்லூரி தூதுவர்கள் அனைத்து மாணவர்களையும் வாக்காளர் அடையாள அட்டை கொண்டுவர செய்து, www.elections.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என சரிபார்க்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் இடம் பெறாத மாணவ, மாணவர்களிடம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் க.சக்திமணி, வருவாய்க் கோட்டாட்சியர்கள் முருகதாஸ், பத்மாவதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொ) பால்துரை, தனி வட்டாட்சியர் (தேர்தல்) திரு.சொக்கநாதன் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.