திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா (பிஎப்ஐ) அமைப்பைச் சேர்ந்த 51 பேர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது, இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மன்னார்குடி மேலராஜவீதியில் உள்ள பெரியார் சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடத்த பிஎப்ஐ அமைப்பினர் முடிவு செய்தனர். இதற்கு போலீஸார் அனுமதி அளிக்கவில்லை.
இந்நிலையில், தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற அந்த அமைப்பின் மாநில செயலாளர் அபுபக்கர் சித்திக் உள்பட 51 பேரை காவல் ஆய்வாளர் மணிவேல் தலைமையிலான போலீஸார், கைது செய்து அழைத்துச் சென்றனர்.