திருவாரூரில் 36 விநாயகர் சிலைகள் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு, சனிக்கிழமை இரவு விசர்ஜனம் செய்யப்பட்டன.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, திருவாரூர் நகர்ப் பகுதிகளில் 36 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன. திருவாரூரில் அழகிரி நகர், அங்காளம்மன் கோயில் முன்புறம், தர்ம கோயில் தெரு, துர்வாசர் சன்னதி தெரு, முடுக்குத் தெரு, மருதப்பாடி, வடக்கு வீதி, தெட்சிணாமூர்த்தி மடம் அருகில், பேபி டாக்கீஸ் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, வழிபாடுகள் நடத்தப்பட்டு வந்தன.
இந்த சிலைகள் அனைத்தும் விசர்ஜனம் செய்யப்படுவதற்காக, அனைத்து விநாயகர் சிலைகளும் கடைவீதி பகுதியில் உள்ள அருள்மிகு உவமைகாளியம்மன் கோயில் அருகே கொண்டு வரப்பட்டு, ஒருங்கிணைக்கப்பட்டன.
பின்னர், அங்கு விநாயகர் சிலைகளுக்கு பூஜைகள் செய்விக்கப்பட்டு, இரவு 7.25 மணிக்கு சிலைகள் ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலமானது, பனகல் சாலை, தெற்கு வீதி வழியாக கமலாலயக் குளத்தைச் சுற்றி வந்தது. பின்னர் மீண்டும் கீழ வீதி, நேதாஜி சாலை, பேபி டாக்கீஸ் சாலை வழியாக சென்று பேருந்து நிலையம் அருகில் உள்ள ஓடம்போக்கி ஆற்றில் அனைத்து விநாயகர் சிலைகளும் விசர்ஜனம் செய்யப்பட்டன.