திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தில் உறவினர் வீட்டுக்கு வந்தவர், ஞாயிற்றுக்கிழமை திடீரென உயிரிழந்தார்.
அரியலூர் மாவட்டம், திருமானூர் காவல் சரகத்துக்குள்பட்ட அரண்மனைக்குறிச்சி காலனி தெருவைச் சேர்ந்த கருப்பையன் மகன் சமுத்திர ராஜா (37). நீடாமங்கலம் பகுதியைச் சேர்ந்த தனது உறவினர் சிவகுமார் வீட்டுக்கு வந்த இவர், ஞாயிற்றுக்கிழமை சாப்பிட்டுவிட்டு, கடைவீதிக்கு சைக்கிளில் சென்றார். அப்போது, பழைய நீடாமங்கலம் சாலையில் சமுத்திர ராஜா மயங்கி விழுந்தாராம்.
உடனடியாக அவர் மீட்கப்பட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சமுத்திர ராஜா மாரடைப்பால் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். அவரது சாவில் மர்மம் இருப்பதாகக் கூறிய அவரது உறவினர்கள், உடலை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டுமென வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து, சமுத்திர ராஜாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதேவேளையில், சமுத்திர ராஜாவின் சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி, அவரது மனைவி ரேவதி நீடாமங்கலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.